சுத்த நிபாதம் 3.12
துவாயதாணுபஸ்ஸனா சூத்திரம் – இரட்டைத் தன்மைகளின் இயல்புகள்
இவ்வாறு நான் கேள்வியுற்றேன்.
பகவர் ஒருமுறை சாவத்திக்கருகில், கிழக்கு விகாரையில், மிகாரரின் தாயின் அரண்மையில் எழுந்தருளியிருந்தார். மாதத்தின் பதினைந்தாம் நாள்—பௌர்ணமி உபோஸத தினம். பகவர் திறந்த வெளியில் துறவிகள் சங்கத்துடன் அமர்ந்திருந்தார். அமைதியாக உட்கார்ந்திருந்த வர்களைப் பார்த்து பகவர் கூறினார்: “துறவிகளே, ‘நீங்கள் திறமையான, மேன்மையான, முன்னேற்றத்துக்கு எடுத்துச் செல்லும், சுயவிழிப்பு உண்டாக்கும் போதனைகளைக் கேட்பது என்ன விளைவை எதிர்பார்த்து? என்று யாராவது கேட்டால், நீங்கள் அவர்களுக்குச் சொல்ல வேண்டியது, ‘இரட்டைத் தன்மைகளின் இயல்புகளை, உள்ளது உள்ளபடி தெரிந்து கொள்வதற்காக.’ ‘நீங்கள் என்ன இரட்டைத் தன்மைப்பற்றி பேசுகின்றீர்கள்?’ ‘இது தான் துக்கம். இதுதான் துக்கத்தின் காரணம்’: இது ஒரு பிரதிபலிப்பு. ‘இது துக்கத்தின் முடிவு. இது தான் துக்கத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும் மார்க்கம்’: இது தான் இரண்டாம் பிரதிபலிப்பு. இவ்வாறு இரட்டைத் தன்மையைப் பற்றிப் பிரதிபலிக்கும் துறவி—விவேகத்துடன், ஆர்வத்துடன், திடமாக—இரண்டில் ஒரு பலனை எதிர்பார்க்கலாம்: இங்கேயே இப்போதே முழு ஞானம் பெறுவது, (எவ்வுலகிலும் மறுபிறப்பில்லை), அல்லது—எதேனும் சில வேட்கை உண்டாக்கும் மாசுகள் மிஞ்சி இருந்தாலும் – அவர் இவ்வுலகில் மறுபிறப் பெடுக்க மாட்டார் (மேல் உலகங்களில் மட்டுமே மறுபிறப் பெடுப்பார்).”
இதைப் பகவர் கூறினார். அவர் மேலும்:
துக்கத்தையும் அது தோன்றும் காரணத்தையும்
அது அடையாளம் தெரியாமல் எங்கு முடிகின்ற தென்பதையும்;
துக்கத்தை முடிக்க எடுத்துச் செல்லும் மார்க்கத்தையும் உய்த்துணராதவர்:
கீழான அளவில்
அவாவிலிருந்து விடுதலை பெற்றவர்,
அறியாமையிலிருந்து விடுதலை பெற்றவராவார்.
துக்கத்தை முடிக்கத் திறமையற்ற
அவர்கள்
பிறப்பையும் மூப்பையும் நோக்கியே
செல்கின்றனர்.துக்கத்தையும் அது தோன்றும் காரணத்தையும்
அது அடையாளம் தெரியாமல் எங்கு முடிகின்ற தென்பதையும்;
துக்கத்தை முடிக்க எடுத்துச் செல்லும் மார்க்கத்தையும் உய்த்துணர்ந்தவர்:
முழுமையாக
அவாவிலிருந்து விடுதலை பெற்றவர்,
அறியாமையிலிருந்து விடுதலை பெற்றவராவார்.
துக்கத்தை முடிக்கும் திறனுள்ள அவர்கள்
பிறப்பையும் மூப்பையும் நோக்கிச்
செல்வதில்லை.
“துறவிகளே, ‘இரட்டைத் தன்மைகளின் இயல்புகளை வேறுவழியில் சரியாகத் தெரிந்து கொள்ள முடியுமா?’ என்று யாராவது கேட்டால், அவர்களிடம், ‘ஆம், முடியும்,’ என்று கூறவேண்டும். ‘அது எப்படி?’
‘எழுகின்ற துக்கத்துக் கெல்லாம் ஈட்டுகையே (பொருள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றின் மீது ஆசைப்பட்டுச் சேர்த்தல்) முதற் காரணமாக உள்ளது’: இது ஒரு பிரதிபலிப்பு. ‘ஈட்டியதை முழுமையாகத் துறந்து மேலும் ஈட்டாமல் இருப்பதனாலேயே துக்கமும் தோன்றாமல் இருக்கும்’: இது தான் இரண்டாம் பிரதிபலிப்பு. இவ்வாறு இரட்டைத் தன்மையைப் பற்றிச் சரியாகப் பிரதிபலிக்கும் துறவி—விவேகத்துடன், ஆர்வத்துடன், திடமாக—இரண்டில் ஒரு பலனை எதிர்பார்க்கலாம்: இங்கேயே இப்போதே முழு ஞானம் பெறுவது, அல்லது—எதேனும் சில வேட்கை உண்டாக்கும் மாசுகள் மிஞ்சி இருந்தாலும் அவர் இவ்வுலகில் மறுபிறப் பெடுக்க மாட்டார்.”
இதைப் பகவர் கூறினார். பிறகு அவர் மேலும்:
உலகில் பலவிதமான அழுத்தங்களும், துயரங்களும்
ஈட்டுதலின் காரணமாகவே தோன்றுகின்றன.
இதை அறியாதவர்கள் மென்மேலும் ஈட்டுகின்றனர்.
அந்த முட்டாள் திரும்பத் திரும்பத்
துக்கம் அனுபவிக்கின்றான்.
எனவே இதனை உய்த்துணர்ந்து,
பிறப்பின் காரணத்தைப் பிரதிபலித்து
ஈட்டுவதன் காரணமாகவே அழுத்தம்
உண்டாவதை அறிய வேண்டும்.
“துறவிகளே, ‘இரட்டைத் தன்மைகளின் இயல்புகளை வேறுவழியில் சரியாகத் தெரிந்து கொள்ள முடியுமா?’ என்று யாராவது கேட்டால், அவர்களிடம் ‘முடியும்,’ என்று கூற வேண்டும். ‘அது எப்படி?’
‘எழுகின்ற துக்கமெல்லாம் அறியாமையை முதற் காரணமாகக் கொண்டுள்ளன’: இது ஒரு பிரதிபலிப்பு. ‘அறியாமையை முழுமையாகக் கைவிட்ட பின், துறந்த பின் துக்கம் உண்டாகாமல் இருக்கும்’: இது தான் இரண்டாம் பிரதிபலிப்பு. இவ்வாறு இந்த இரட்டைத் தன்மையைப் பற்றிச் சரியாகப் பிரதிபலிக்கும் துறவி—விவேகத்துடன், ஆர்வத்துடன், திடமாக—இரண்டில் ஒரு பலனை எதிர்பார்க்கலாம்: இங்கேயே இப்போதே முழு ஞானம் பெறுவது, அல்லது—எதேனும் சில வேட்கை உண்டாக்கும் மாசுகள் மிஞ்சி இருந்தாலும்—இவ்வுலகில் மறுபிறப் பெடுக்க மாட்டார்.”
இதைப் பகவர் கூறினார். பிறகு அவர் மேலும்:
யாரெல்லாம் சம்சாரச் சுழலுல்
மீண்டும் மீண்டும் பிறப்பும் இறப்பும்,
இங்கு ஒரு நிலையில்
அல்லது வேறு ஓரிடத்தில்
அலைகின்றனரோ அவர்கள் கதி (செல்லுமிடம்)
அறியாமையினாலேயே உண்டானது.
இந்த அறியாமை ஒரு பெரும் மயக்கம்.
அதில் காலவரையின்றி
நடமாடிக் கொண்டுள்ளனர்.
ஆனால் தெளிவாக அறிந்தவர்கள்
மேலும் பிறப்பெடுப்பதில்லை.
“துறவிகளே, ‘இரட்டைத் தன்மைகளின் இயல்புகளை வேறுவழியில் சரியாகத் தெரிந்து கொள்ள முடியுமா?’ என்று யாராவது கேட்டால், அவர்களிடம் ‘முடியும்,’ என்று கூற வேண்டும். ‘அது எப்படி?’
‘எழுகின்ற துக்கமெல்லாம் கன்மச் செயல்களை முதற் காரணமாகக் கொண்டுள்ளன’: இது ஒரு பிரதிபலிப்பு. ‘கன்மச் செயல்களை முழுமையாகக் கைவிட்ட பின், துறந்த பின் துக்கம் உண்டாகாமல் இருக்கும்’: இது தான் இரண்டாம் பிரதிபலிப்பு. இவ்வாறு இந்த இரட்டைத் தன்மையைப் பற்றிச் சரியாகப் பிரதிபலிக்கும் துறவி—விவேகத்துடன், ஆர்வத்துடன், திடமாக—இரண்டில் ஒரு பலனை எதிர்பார்க்கலாம்: இங்கேயே இப்போதே முழு ஞானம் பெறுவது அல்லது—எதேனும் சில வேட்கை உண்டாக்கும் மாசுகள் மிஞ்சி இருந்தாலும்—இவ்வுலகில் மறு பிறப்பெடுக்க மாட்டார்.”
இதைப் பகவர் கூறினார். சொன்னபிறகு அவர் மேலும்:
தோன்றும் அழுத்தங்களும், துயரங்களும்
கன்மச் செய்கைகளின்
காரணமாகவே தோன்றுகின்றன.
கன்மச் செய்கைகளை முடித்து விட்டால்,
துக்கம் தோன்ற வழியில்லை.
இந்தக் குறைபாட்டை—
துக்கம் கன்மச் செயல்களினால்
தோன்றுகிறது என்பதை—அறிந்தபின்
கன்மச் செயல்களை முடிக்க வேண்டும்,
மனக்குறிப்புகள் நின்றபின்:
துக்கத்தின்
முடிவுக்கு வரலாம்.
இதனை உள்ளபடி தெரிந்து கொள்பவர்,
மெய்ஞ்ஞானம் பெற்றவர்
சரியாகக் காண்கிறார்.
சரியாகக் காண்பதால்,
மெய்ஞ்ஞானம் உடையவர்—
மாரனின் வலையில் சிக்காமல்—
மீண்டும் பிறப்பெடுப்பதில்லை.
“துறவிகளே, ‘இரட்டைத்தன்மைகளின் இயல்புகளை வேறுவழியில் சரியாகத் தெரிந்து கொள்ள முடியுமா?’ என்று யாராவது கேட்டால், அவர்களிடம் ‘முடியும்,’ என்று கூற வேண்டும். ‘அது எப்படி?’
‘எழுகின்ற துக்கமெல்லாம் உணர்வை (அறிநிலை) முதற் காரணமாகக் கொண்டுள்ளன’: இது ஒரு பிரதிபலிப்பு. ‘உணர்வை முழுமையாகக் கைவிட்ட பின், துறந்த பின் துக்கம் உண்டாகாமல் இருக்கும்’: இது தான் இரண்டாம் பிரதிபலிப்பு. இவ்வாறு இந்த இரட்டைத் தன்மையைப் பற்றிச் சரியாகப் பிரதிபலிக்கும் துறவி—விவேகத்துடன், ஆர்வத்துடன், திடமாக—இரண்டில் ஒரு பலனை எதிர்பார்க்கலாம்: இங்கேயே இப்போதே முழு ஞானம் பெறுவது, அல்லது—எதேனும் சில வேட்கை உண்டாக்கும் மாசுகள் மிஞ்சி இருந்தாலும்—இவ்வுலகில் மறு பிறப்பெடுக்க மாட்டார்.”
இதைப் பகவர் கூறினார். சொன்னபிறகு அவர் மேலும்:
தோன்றும் அழுத்தங்களும், துயரங்களும்
உணர்வின் காரணமாகவே தோன்றுகின்றன.
உணர்வை முடித்து விட்டால்,
துக்கம்
தோன்ற வழியில்லை.
இந்தக் குறைபாட்டை—
துக்கம் உணர்வினால்
தோன்றுகிறது என்பதை—
அறிந்தபின் உணர்வை அமைதியாக்கினால்,
துறவிக்குப் பசி நீங்கி
அவர் சுமையில்லாமல் இருப்பார்.
“துறவிகளே, ‘இரட்டைத் தன்மைகளின் இயல்புகளை வேறு ஏதாவது வழியில் சரியாகத் தெரிந்து கொள்ள முடியுமா?’ என்று யாராவது கேட்டால், அவர்களிடம் ‘முடியும்,’ என்று கூற வேண்டும். ‘அது எப்படி?’
‘எழுகின்ற துக்கமெல்லாம் தொடர்பை (மணிமேகலை காவியத்தில் இது ஊறு என்று கூறப்படும். தொடர்புக்கு உதாரணம்: உருவமும், கண் புலனும், கண் உணர்வும் சேருவது கண் தொடர்பு) முதற் காரணமாகக் கொண்டுள்ளன’: இது ஒரு பிரதிபலிப்பு. ‘தொடர்பை முழுமையாகக் கைவிட்ட பின், துறந்த பின் துக்கம் உண்டாகாமல் இருக்கும்’: இது தான் இரண்டாம் பிரதிபலிப்பு. இவ்வாறு இந்த இரட்டைத் தன்மையைப் பற்றிச் சரியாகப் பிரதிபலிக்கும் துறவி—விவேகத்துடன், ஆர்வத்துடன், திடமாக—அவர் இரண்டில் ஒரு பலனை எதிர்பார்க்கலாம்: இங்கேயே இப்போதே முழு ஞானம் பெறுவது, அல்லது—எதேனும் சில வேட்கை உண்டாக்கும் மாசுகள் மிஞ்சி இருந்தாலும்—இவ்வுலகில் மறு பிறப்பெடுக்க மாட்டார்.”
இதைப் பகவர் கூறினார். சொன்னபிறகு அவர் மேலும்:
தொடர்பினால் அடித்துச் செல்லப்படுவோர்,
தொடர்ந்து தோன்றுதல் என்ற ஓடையின் ஓட்டத்தோடு செல்வோர்,
அப்படிப்பட்ட சீரழிந்த பாதையில் போவோருக்கு
மாசுகளின் முடிவு
வெகுதொலைவில் உள்ளது.
ஆனால் தொடர்பைப் புரிந்து கொண்டவர்கள்,
அதை விவேகத்துடன் அமைதியாக்குபவர்,
தொடர்பை உடைத்துச் சென்று,
பசி நீக்கி
சுமையில்லாமல் இருப்பார்.
“துறவிகளே, ‘இரட்டைத் தன்மைகளின் இயல்புகளை வேறொரு வழியில் சரியாகத் தெரிந்து கொள்ள முடியுமா?’ என்று யாராவது கேட்டால், அவர்களிடம் ‘முடியும்,’ என்று கூறவேண்டும். ‘அது எப்படி?’
‘எழுகின்ற துக்கமெல்லாம் நுகர்ச்சியை முதற் காரணமாகக் கொண்டுள்ளன’: இது ஒரு பிரதிபலிப்பு. ‘நுகர்ச்சியை முழுமையாகக் கைவிட்ட பின், துறந்த பின் துக்கம் உண்டாகாமல் இருக்கும்’: இது தான் இரண்டாம் பிரதிபலிப்பு. இவ்வாறு இந்த இரட்டைத் தன்மையைப் பற்றிச் சரியாகப் பிரதிபலிக்கும் துறவி—விவேகத்துடன், ஆர்வத்துடன், திடமாக—இரண்டில் ஒரு பலனை எதிர்பார்க்கலாம்: இங்கேயே இப்போதே முழு ஞானம் பெறுவது, அல்லது—எதேனும் சில வேட்கை உண்டாக்கும் மாசுகள் மிஞ்சி இருந்தாலும்—இவ்வுலகில் மறு பிறப்பெடுக்க மாட்டார்.”
இதைப் பகவர் கூறினார். சொன்னபிறகு அவர் மேலும்:
இதைத் தெரிந்து
நுகர்வனவெல்லாம்—
இன்பம், துன்பம்,
இன்பதுன்பம் இரண்டும் அல்லாத,
உள்ளும் வெளியிலும்—
அழுத்தமுடையவை,
ஏமாற்றத் தக்கவை,
கரையும் தன்மையுடையவை,
ஒவ்வொரு தொடர்பிலும்,
இதை அறிவார்:
நுகர்ச்சி முடிந்தால்,
துக்கம் தோன்ற
வழியில்லை.
“துறவிகளே, ‘இரட்டைத் தன்மைகளின் இயல்புகளை வேறு ஏதேனும் வழியில் சரியாகத் தெரிந்து கொள்ள முடியுமா?’ என்று யாராவது கேட்டால், அவர்களிடம் ‘முடியும்,’ என்று கூற வேண்டும். ‘அது எப்படி?’
‘எழுகின்ற துக்கமெல்லாம் வேட்கையை முதற் காரணமாகக் கொண்டுள்ளன’: இது ஒரு பிரதிபலிப்பு. ‘வேட்கையை முழுமையாகக் கைவிட்ட பின், துறந்த பின் துக்கம் உண்டாகாமல் இருக்கும்’: இது தான் இரண்டாம் பிரதிபலிப்பு. இவ்வாறு இந்த இரட்டைத் தன்மையைப் பற்றிச் சரியாகப் பிரதிபலிக்கும் துறவி—விவேகத்துடன், ஆர்வத்துடன், திடமாக—இரண்டில் ஒரு பலனை எதிர்பார்க்கலாம்: இங்கேயே இப்போதே முழு ஞானம் பெறுவது, அல்லது—எதேனும் சில வேட்கை உண்டாக்கும் மாசுகள் மிஞ்சி இருந்தாலும்—இவ்வுலகில் மறு பிறப்பெடுக்க மாட்டார்.”
இதைப் பகவர் கூறினார். சொன்னபிறகு அவர் மேலும்:
வேட்கையைத் தோழனாகக் கொண்ட ஒருவன்,
நீண்ட நெடுங்காலமாக அலைந்து திரிகின்றான்.
இருக்கும் நிலையிலும் வேறு எங்கும்
அவன் அலைந்துதிரிவதற்கு
அப்பால் போவதில்லை.
இந்தக் குறைபாட்டைத் தெரிந்தவன்—
வேட்கை துக்கத்துக்கு அழைத்துச் செல்லும்
என்பதை அறிந்து—
வேட்கை இல்லாமல்,
பற்றும் இல்லாமல்,
கடைப்பிடியுடன் துறவி துறவற வாழ்வை வாழ்கிறார்.
“துறவிகளே, ‘இரட்டைத்தன்மைகளின் இயல்புகளை வேறுவழியில் சரியாகத் தெரிந்து கொள்ள முடியுமா?’ என்று யாராவது கேட்டால், அவர்களிடம் ‘முடியும்,’ என்று கூற வேண்டும். ‘அது எப்படி?’
‘எழுகின்ற துக்கமெல்லாம் பற்றை முதற் காரணமாகக் கொண்டுள்ளன’: இது ஒரு பிரதிபலிப்பு. ‘பற்றை முழுமையாகக் கைவிட்ட பின், துறந்த பின் துக்கம் உண்டாகாமல் இருக்கும்’: இது தான் இரண்டாம் பிரதிபலிப்பு. இவ்வாறு இந்த இரட்டைத் தன்மையைப் பற்றிச் சரியாகப் பிரதிபலிக்கும் துறவி—விவேகத்துடன், ஆர்வத்துடன், திடமாக—அவர் இரண்டில் ஒரு பலனை எதிர்பார்க்கலாம்: இங்கேயே இப்போதே முழு ஞானம் பெறுவது, அல்லது—எதேனும் சில வேட்கை உண்டாக்கும் மாசுகள் மிஞ்சி இருந்தாலும்—இவ்வுலகில் மறு பிறப்பெடுக்க மாட்டார்.”
இதைப் பகவர் கூறினார். சொன்னபிறகு அவர் மேலும்:
பற்றின் காரணமாக
வருவதே பவம்.
தோன்றியவன்
துக்கம்
அனுபவிக்கின்றான்.
இறப்பு இருப்பது
பிறந்தவனுக்கே.
இதுவே துக்கம்
தோன்றக் காரணம்.
ஆக பற்றை முடித்தபின் மெய்ஞ்ஞானமுடையோர்
சரியாகப் பார்க்கின்றனர்,
பிறப்பின் முடிவை
நேரடியாகக் காண்கின்றனர்,
பின் அவர்களுக்கு மறுபிறப்பு இருப்பதில்லை.
“துறவிகளே, ‘இரட்டைத்தன்மைகளின் இயல்புகளை வேறுவழியில் சரியாகத் தெரிந்து கொள்ள முடியுமா?’ என்று யாராவது கேட்டால், அவர்களிடம் ‘முடியும்,’ என்று கூற வேண்டும். ‘அது எப்படி?’
‘எழுகின்ற துக்கமெல்லாம் அலந்தலைப்பை முன்காரணமாகக் கொண்டுள்ளன’: இது ஒரு பிரதிபலிப்பு. ‘அலந்தலைப்பை முழுமையாகக் கைவிட்ட பின், துறந்த பின் துக்கம் உண்டாகாமல் இருக்கும்’: இது தான் இரண்டாம் பிரதிபலிப்பு. இவ்வாறு இந்த இரட்டைத் தன்மையைப் பற்றிச் சரியாகப் பிரதிபலிக்கும் துறவி—விவேகத்துடன், ஆர்வத்துடன், திடமாக—அவர் இரண்டில் ஒரு பலனை எதிர்பார்க்கலாம்: இங்கேயே இப்போதே முழு ஞானம் பெறுவது, அல்லது—எதேனும் சில வேட்கை உண்டாக்கும் மாசுகள் மிஞ்சி இருந்தாலும்—இவ்வுலகில் மறு பிறப்பெடுக்க மாட்டார்.”
இதைப் பகவர் கூறினார். சொன்னபிறகு அவர் மேலும்:
தோன்றும் அழுத்தங்களும் துயரங்களும்
அலந்தலைப்பின்
காரணமாகவே தோன்றுகின்றன.
அலந்தலைப்பை முடித்து விட்டால்,
துக்கம்
தோன்ற வழியில்லை.
இந்தக் குறைபாட்டை—
துக்கம் அலந்தலைப்பினால்
தோன்றுகிறது என்பதை—
அறிந்தபின்
எல்லா அலந்தலைப்பையும் முடித்து,
ஒரு துறவி அலந்தலைப்பில்லா நிலையில்
விடுவிக்கப் படுகிறார்,
தோன்ற வேண்டும் என்ற வேட்கை
நசுக்கப் படுகிறது,
அவர் மன அமைதியிலிருந்து,
மறுபிறப்பெடுக்கும் பயணத்தை முடித்து விடுகிறார்: மேலும் பிறப்பெடுப்பதில்லை.
“துறவிகளே, ‘இரட்டைத் தன்மைகளின் இயல்புகளை வேறுவழியில் சரியாகத் தெரிந்து கொள்ள முடியுமா?’ என்று யாராவது கேட்டால், அவர்களிடம் ‘முடியும்,’ என்று கூற வேண்டும். ‘அது எப்படி?’
‘எழுகின்ற துக்கமெல்லாம் போஷாக்கை முன்காரணமாகக் கொண்டுள்ளன’: இது ஒரு பிரதிபலிப்பு. ‘போஷிப்பதை முழுமையாகக் கைவிட்ட பின், துறந்த பின் துக்கம் உண்டாகாமல் இருக்கும்’: இது தான் இரண்டாம் பிரதிபலிப்பு. இவ்வாறு இந்த இரட்டைத் தன்மையைப் பற்றிச் சரியாகப் பிரதிபலிக்கும் துறவி—விவேகத்துடன், ஆர்வத்துடன், திடமாக—இரண்டில் ஒரு பலனை எதிர்பார்க்கலாம்: இங்கேயே இப்போதே முழு ஞானம் அடைவது, அல்லது—எதேனும் சில வேட்கை உண்டாக்கும் மாசுகள் மிஞ்சி இருந்தாலும்—இவ்வுலகில் மறு பிறப்பெடுக்க மாட்டார்.”
இதைப் பகவர் கூறினார். சொன்னபிறகு அவர் மேலும்:
தோன்றும் அழுத்தங்களும் துயரங்களும்
போஷாக்கின் காரணமாகவே தோன்றுகின்றன.
போஷித்தலை முடித்து விட்டால்,
துக்கம்
தோன்ற வழியில்லை.
இந்தக் குறைபாட்டை—
துக்கம் போஷித்தலினால்
தோன்றுகிறது என்பதை—
அறிந்தபின்
எல்லா போஷித்தலையும் அறிந்து,
போஷித்தலைச் சார்ந்து இருக்காமல்,
சரியாகப் பார்த்து
மாசுகளை முடித்து
நோயிலிருந்து விடுபட்டு,
விவேகத்துடன் தோழமை கொண்டு,
ஒரு நீதிபதியாக,
அவர் மெய்ஞ்ஞானம் பெற்று
அபிப்பிராயங்களுக்கு அப்பாலும்,
வகைபடுத்த முடியாதவராகவும் செல்கிறார்.
“துறவிகளே, ‘இரட்டைத் தன்மைகளின் இயல்புகளை வேறுவழியில் சரியாக தெரிந்து கொள்ள முடியுமா?’ என்று யாராவது கேட்டால், அவர்களிடம் ‘முடியும்,’ என்று கூற வேண்டும். ‘அது எப்படி?’
‘எழுகின்ற துக்கமெல்லாம் கலகத்தை முன்காரணமாகக் கொண்டுள்ளன’: இது ஒரு பிரதிபலிப்பு. ‘கலகத்தை முழுமையாகக் கைவிட்ட பின், துறந்த பின் துக்கம் உண்டாகாமல் இருக்கும்’: இது தான் இரண்டாம் பிரதிபலிப்பு. இவ்வாறு இந்த இரட்டைத் தன்மையைப் பற்றிச் சரியாகப் பிரதிபலிக்கும் துறவி—விவேகத்துடன், ஆர்வத்துடன், திடமாக—இரண்டில் ஒரு பலனை எதிர்பார்க்கலாம்: இங்கேயே இப்போதே முழு ஞானம் பெறுவது, அல்லது—எதேனும் சில வேட்கை உண்டாக்கும் மாசுகள் மிஞ்சி இருந்தாலும்—இவ்வுலகில் மறு பிறப்பெடுக்க மாட்டார்.”
இதைப் பகவர் கூறினார். பிறகு அவர் மேலும்:
தோன்றும் அழுத்தங்களும் துயரங்களும்
கலகத்தின்
காரணமாகவே தோன்றுகின்றன.
கலகத்தை முடித்து விட்டால்,
துக்கம்
தோன்ற வழியில்லை.
இந்தக் குறைபாட்டை—
துக்கம் கலகத்தினால்
தோன்றுகிறது என்பதை—
அறிந்தபின்—
கலகத்தைக் கைவிட்ட துறவி,
கன்மச் செய்கைகளை முடித்தவர்,
கலகம் இல்லாமல்,
வேட்கை இல்லாமல்,
கடைப்பிடியோடு
நாடோடியாகச் சுற்றிவாழும்
வாழ்க்கையை வாழ்கிறார்.
“துறவிகளே, ‘இரட்டைத் தன்மைகளின் இயல்புகளை வேறுவழியில் சரியாகத் தெரிந்து கொள்ள முடியுமா?’ என்று யாராவது கேட்டால், அவர்களிடம் ‘முடியும்,’ என்று கூற வேண்டும். ‘அது எப்படி?’
‘சார்ந்திருக்கும் ஒருவர் தடுமாறுகிறார்’: இது ஒரு பிரதிபலிப்பு. ‘சார்ந்திராமல் இருப்பவர் தடுமாறுவதில்லை’: இது தான் இரண்டாம் பிரதிபலிப்பு. இவ்வாறு இந்த இரட்டைத் தன்மையைப் பற்றிச் சரியாகப் பிரதிபலிக்கும் துறவி—விவேகத்துடன், ஆர்வத்துடன், திடமாக—இரண்டில் ஒரு பலனை எதிர்பார்க்கலாம்: இங்கேயே இப்போதே முழு ஞானம் பெறுவது, அல்லது—எதேனும் சில வேட்கை உண்டாக்கும் மாசுகள் மிஞ்சி இருந்தாலும்—இவ்வுலகில் மறு பிறப்பெடுக்க மாட்டார்.”
இதைப் பகவர் கூறினார். சொன்னபிறகு அவர் மேலும்:
சார்ந்திராமல் இருப்பவர்
தடுமாறுவதில்லை
சார்ந்திருக்கும் ஒருவர்,
இங்கு இந்த நிலைக்கும்,
அல்லது வேறு எங்காவது
வேட்கையினால்,
சம்சாரத்துள் சுழலுதற்கு
அப்பால் செல்வதில்லை.
இந்தக் குறைபாட்டை—
சார்ந்திருப்பதன் அபாயத்தை—
அறிந்தபின்,
சார்ந்திராமல்,
வேட்கையில்லாமல்,
கடைப்பிடியோடு
சுற்றிவாழும் வாழ்க்கையை
வாழ்கிறார்.
“துறவிகளே, ‘இரட்டைத் தன்மைகளின் இயல்புகளை வேறுவழியில் சரியாக தெரிந்து கொள்ள முடியுமா?’ என்று யாராவது கேட்டால், அவர்களிடம் ‘முடியும்,’ என்று கூற வேண்டும். ‘அது எப்படி?’
‘அருவத் தோற்றங்கள் உருவத் தோற்றங்களைவிட அமைதியானவை.’ : இது ஒரு பிரதிபலிப்பு. ‘முடிவு (தோற்றாமல் இருப்பது) அருவத் தோற்றங்களைவிட அமைதியானது’: இது தான் இரண்டாம் பிரதிபலிப்பு. இவ்வாறு இந்த இரட்டைத் தன்மையைப் பற்றிச் சரியாகப் பிரதிபலிக்கும் துறவி—விவேகத்துடன், ஆர்வத்துடன், திடமாக—அவர் இரண்டில் ஒரு பலனை எதிர்பார்க்கலாம்: இங்கேயே இப்போதே முழு ஞானம் பெறுவது, அல்லது—எதேனும் சில வேட்கை உண்டாக்கும் மாசுகள் மிஞ்சி இருந்தாலும் அவர் இவ்வுலகில் மறு பிறப்பெடுக்க மாட்டார்.”
இதை பகவர் கூறினார். சொன்னபிறகு அவர் மேலும்:
உருவத் தோற்றங்கள் எடுக்கவிருக்கும் உயிர்களும்,
அருவத்தோற்றங்களோடு உள்ளவரும்
தோற்றம் எடுக்காமல் இருப்பதை அறியாதவர்,
மேன்மேலும் பிறப்பெடுப்பார்.ஆனால் உருவத்தை அறிந்தவர்,
அருவத்தை எடுக்க விருப்பமில்லாதவர்,
தோற்றத்தின் முடிவை எட்டியவர்
அவர்களே மரணத்தை விட்டுச் செல்வார்.
“துறவிகளே, ‘இரட்டைத் தன்மைகளின் இயல்புகளை வேறுவழியில் சரியாகத் தெரிந்து கொள்ள முடியுமா?’ என்று யாராவது கேட்டால், அவர்களிடம் ‘முடியும்,’ என்று கூற வேண்டும். ‘அது எப்படி?’
‘தேவர்களும், மாரர்களும், பிரம்மர்களும், துறவிகளும், பிராமணர்களும், ராஜ குடும்பத்தினரும், சாதாரணக் குடிமக்களும் வாழும் இவ்வுலகில் ‘இது தான் உண்மை’ யென்று கருதப்படுவது, சரியான விவேகத்துடன் உள்ள மேன்மையானவர் ‘இது தான் பொய்மை’ என்றறிவார்.’: இது ஒரு பிரதிபலிப்பு. ‘தேவர்களும், மாரர்களும், பிரம்மர்களும், துறவிகளும், பிராமணர்களும், ராஜ குடும்பத்தினரும், சாதாரண குடிமக்களும் வாழும் இவ்வுலகில் ‘இது தான் பொய்மை’ யென்று கருதப்படுவது சரியான விவேகத்துடன் உள்ள மேன்மையானவர் ‘இது தான் உண்மை’ என்றறிவார்.’: இது தான் இரண்டாம் பிரதிபலிப்பு. இவ்வாறு இந்த இரட்டைத் தன்மையைப் பற்றிச் சரியாகப் பிரதிபலிக்கும் துறவி—விவேகத்துடன், ஆர்வத்துடன், திடமாக—இரண்டில் ஒரு பலனை எதிர்பார்க்கலாம்: இங்கேயே இப்போதே முழு ஞானம் பெறுவது, அல்லது—எதேனும் சில வேட்கை உண்டாக்கும் மாசுகள் மிஞ்சி இருந்தாலும், அவர் இவ்வுலகில் மறு பிறப்பெடுக்க மாட்டார்.”
இதைப் பகவர் கூறினார். சொன்னபிறகு அவர் மேலும்:
தேவர்களும் வாழும் இவ்வுலகம்
‘தான்-இன்மையைத்’ தான் என்று பாவிக்கின்றது.
பெயரும் உருவமும் கொண்டிருப்பதால்
அவர்கள் ‘இது தான் வாய்மை’ என்று நினைத்துக் கொள்கின்றனர்.
எப்படி உணர்ந்தாலும்
அது வேறொன்றாகி விடுகிறது,
எனவே இது தான் அவற்றின் பொய்மை:
மாற்றம் உடையது,
இயற்கையிலேயே திருட்டுக்குணம் உடையது.சுமையில்லாமல் இருக்கும் போது
இயற்கையிலேயே அது போலித்தன்மை இல்லாமல் இருக்கும்:
இதனை மேன்மையானோர் வாய்மை என்றறிவார்.
அவர்கள் உண்மையை அறிந்தபின்,
பசியிலிருந்து விடுபட்டு,
முழுமையாகச் சுமையை இறக்கி விடுகின்றனர்.
“துறவிகளே, ‘இரட்டைத் தன்மைகளின் இயல்புகளை வேறுவழியில் சரியாகத் தெரிந்து கொள்ள முடியுமா?’ என்று யாராவது கேட்டால், அவர்களிடம் ‘முடியும்,’ என்று கூற வேண்டும். ‘அது எப்படி?’
‘தேவர்களும், மாரர்களும், பிரம்மர்களும், துறவிகளும், பிராமணர்களும், ராஜ குடும்பத்தினரும், சாதாரணக் குடிமக்களும் வாழும் இவ்வுலகில் ‘இது தான் ஆனந்தம்’ என்று கருதப்படுவது சரியான விவேகத்துடன் உள்ள மேன்மையானவர் ‘இது தான் துக்கம்’ என்றறிவார்.’: இது ஒரு பிரதிபலிப்பு. ‘தேவர்களும், மாரர்களும், பிரம்மர்களும், துறவிகளும், பிராமணர்களும், ராஜ குடும்பத்தினரும், சாதாரணக் குடிமக்களும் வாழும் இவ்வுலகில் ‘இது தான் துக்கம்’ மென்று கருதப்படுவது சரியான விவேகத்துடன் உள்ள மேன்மையானவர் ‘இது தான் ஆனந்தம்’ என்றறிவார்.’: இது தான் இரண்டாம் பிரதிபலிப்பு. இவ்வாறு இந்த இரட்டைத் தன்மையைப் பற்றிச் சரியாகப் பிரதிபலிக்கும் துறவி—விவேகத்துடன், ஆர்வத்துடன், திடமாக—இரண்டில் ஒரு பலனை எதிர்பார்க்கலாம்: இங்கேயே இப்போதே முழு ஞானம் பெறுவது, அல்லது—எதேனும் சில வேட்கை உண்டாக்கும் மாசுகள் மிஞ்சி இருந்தாலும் அவர் இவ்வுலகில் மறு பிறப்பெடுக்க மாட்டார்.”
இதைப் பகவர் கூறினார். சொன்னபிறகு அவர் மேலும்:
காட்சிகளும், ஓசைகளும், நுகர்வுகளும், சுவைகளும்,
பரிசங்களும், கருத்துக்களும்:
வரவேற்கத்தக்கவை,
கவர்ச்சியானவை,
இணக்கமானவை—
இவையெல்லாம் இருப்பதாகக் கூறப்படும்வரை,
தேவர்களும் வாழும் இவ்வுலகம்
அவற்றை ஆனந்தம் என்றே உணர்கின்றது.
ஆனால் அவை மறைந்தவுடன்,
அவர்கள் அதனையே
துக்கமுண்டாக்குபவையாக உணர்கின்றனர்.
அகங்காரத்தை முடிப்பதே
மேன்மையானோரால்
ஆனந்தம் என்றறியப்படுகிறது.
உலகம் இதற்கு மாறான
கருத்தையே
கொண்டிருக்கிறது.மற்றவர் ஆனந்தம் என்று சொல்வதை
மேன்மையானோர் துக்கம் என்கின்றனர்.
மற்றவர் துக்கம் என்று கூறுவதை,
மேன்மையானோர் ஆனந்தம் என்றறிவார்.
அறத்தைப் பாருங்கள், அறிவது கடினம்!
இங்கு அதனை அறியாதவர்
குழப்பத்தில் உள்ளனர்.
திரை மூடியவர்,
அவருக்கு இருட்டாக உள்ளது,
கண் தெரியாதோர்
குருடாக இருப்பது போல.மேன்மையானவருக்கு இது தெளிவாக உள்ளது,
கண் தெரிபவர்களுக்கு வெளிச்சத்தைப்போல.அவர்கள் முன்னிலையிலேயே
அவர்களால் அறிய முடியவில்லை—
அறிவில்லா விலங்குகள், தன்மத்தில் திறமையற்றோர்.
தோற்றத்துக்கு அவா கொண்டுள்ளவருக்கு
தோற்றம் என்ற ஓடையோடு அடித்துச் செல்லப்படுபவர்களுக்கு
மாரனின் வலையில் சிக்கியவர்களுக்கு
இந்த அறத்தைக் கண்டு விழிப்புறுவது
சுலபம் இல்லை.மேன்மையானோரைத் தவிர,
இந்த நிலையில் விழிப்புறத் தகுதியானவர்
வேறு யார்?—
சரியாகத் தெரிந்து கொண்ட,
மாசுகளிடமிருந்து விடுபட்ட,
முழுமையாகச் சுமையில்லாத
நிலை.
பகவர் இதைக் கூறினார். பகவரின் வார்த்தைகளைக் கேட்ட துறவிகள் ஆனந்தப் பட்டனர். இந்தப் போதனை தரப்படும்போது அறுபது துறவிகளின் மனங்களும், வேட்கையின்மையால் முழுமையாக மாசுகளிடமிருந்து விடுபட்டன.